Saturday, November 14, 2009

ஞாபகம் வருதே…

எங்களைவிட்டு தூரப்போன சில விசியங்களை இண்டைக்கு உங்களோடை கதைக்கலாம் என்று நான் நினைக்கிறன் கண்டியளோ. அன்று நாங்கள் அனுபவித்த இந்த விசியங்களை நாகரீகத்தின், வளர்ச்சி ஜெனேரசன் கப், இப்படி பல வந்து எங்கட பிள்ளைகள் அனுபவிப்பதை தடுத்துப்போட்டு கண்டியளோ.
இன்று இந்த விசியங்களை நாங்கள் எங்களுக்கை கதைக்கேக்கயே சந்தோசமாகத்தான் இருக்கு பாருங்கோ.

நாங்கள் முந்தி பல விதமான அடுப்புகளை பாவித்தனாங்கள்தானே. முக்கியமாக விறகு அடுப்புகள், மண் சட்டியை வாங்கி பிறகு அதையும் நெருப்புக்கொழுத்தி சுட்டு, அதில கறிகாச்சி சாப்பிட்டால் அதின்ட சுவைக்கு முன்னால உலகத்தில எந்த அமுதசுரபியை கொண்டு வந்து வைத்தாலும் முன்னுக்கு நிற்க ஏலாது கண்டியளோ.
அப்படி நாங்கள் பாவித்த பழைய சமையல் உபகரணங்களில தூள் அடுப்பும் ஒண்டு. முந்தி மரக்காலைகளில, போய் மரஞ்சீவிய தூள்களை எடுத்துக்கொண்டுவந்து, பழைய பூவாளியிண்ட சைசில உள்ள தகரத்தையோ, இல்லாட்டி, பெரிய தகர டப்பாவையோ, எடுத்து. விறகு உள்ள விடுவதற்கு ஏற்றாப்போல கீழ் பகுதியில ஓரளவு ஓட்டை போட்டு, பெரிய சாராய போத்திலை நடுவுக்கை வைத்து, மரத்தூளை டப்பாவிலை கொட்டி, போத்தில சுத்தி இறுக்கி அடைத்து, விறகு ஓட்டையில தூளை நீங்கி கொஞ்சம் விறகை தீமூட்டி, இந்த மரத்தூள் அடுப்பு எரித்தகாலம் ஒன்று இருந்தது கண்டியளோ. நல்லா நின்றும் எரியும் அது.
இப்பத்த பெடியளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை.

அதேபோல, முந்தி ஒரு வீட்டிலை குறைஞ்சது மூண்டு மாமரமாவது நிக்கும் பாருங்கோ, அம்பலவி, கறுத்த கொழும்பான், சேலம், விளாட், செம்பாடு, வெள்ளைக்கொழும்பான், கிளிச்சொண்டு, பாண்டி என்று பலவகை மாமரங்கள் அப்ப நின்றது. எல்லாம் பெரும்பாலும் ஒரே சீசனிலதான் காய்க்கும் கண்டியளோ.
சும்மா சிலிர்த்துப்பூக்கும். பிறகு பிஞ்சுபிடித்து முத்தின உடன, கிறு கிறு என்று அணில்பிள்ளை வந்து கடிக்கிறதுக்கு முன்னம், அவருக்கும் கொஞ்சம் விட்டுவிட்டு மிச்சத்தை, முத்தல் மாங்காய்களை, கீழே விழாமல் புடுங்கி எடுத்து வைத்திருப்பினம்.
பிறகு, முற்றத்தில சின்ன கிடங்கு ஒன்று வெட்டி, அதுக்குள்ள, வைக்கோல், உமி எல்லாம்போட்டு, அதுக்குள்ள இந்த முத்தின மாங்காய்களை வைத்து, தகரத்தால மூடி, மேல மண்ணைப்போட்டு, அதுக்குள்ள போகக்கூடியதாக சின்ன ஓட்டைபோட்டு, அந்த ஓட்டைக்குள்ளால உள்ளுக்கு போகத்தக்கனமாதிரி புகையடிப்பினம். இரண்டு, மூன்று நாளில சும்மா, தங்க நிறத்தில பழங்கள் எல்லாம் பழுத்து. நல்ல மாம்பழ மணத்தோட இருக்கும் கண்டியளோ. பிறகென்ன எடுத்து விளையாடவேண்டியதுதானே.

முந்தி வாற இனிப்புகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கே? தோடம்பழ இனிப்பு, புளி இனிப்பு, கட்டியாக கலர் கலர்ராக கோடுபோட்ட இனிப்பு, இப்பத்த பெப்பமென்போல கலர்கலராக நல்ல ஒரு ருசியாக இருந்த இனிப்பு, மினக்கெட்டு சாப்பிட புளுட்டோ என்று ஒரு இனிப்பு, பல்லிமுட்டை இனிப்பு, பொரிவிளாங்காய், பிறகு ரோஸ்கலரில பொரிபொரியாக இருக்கும் ஒரு இனிப்பு, ஒரேஞ்ச் இனிப்பு, பிறகு அப்பளம் மாதிரி கலர்கலராக இருக்கும் ஒரு இனிப்பு, இப்படி எத்தனை இனிப்புகள். அதுகளின்ட சுவையே தனிசுவை கண்டியளோ.
முந்தி அப்பாவிண்ட பொக்கேட்டுக்கை இரண்டு ரூபாவை அபேஸ் பண்ணிட்டு, கடைக்கு போனா, அங்கை பெரிய வயித்தோடை மாப்பிள்ளைக்கோடன் சாறம் உடுத்துக்கொண்டு கடைக்கார மாமா இருப்பார், ரெண்டு ரூபாவை நீட்டிவிட்டு. உள்ள இனிப்புகள் எல்லாத்தையும் காட்டுவம். பாவம் மனிசன், சின்னனுகள் வந்து கேட்குதுகள் என்று அள்ளி தருவார், பிறகென்ன அத்தனையையும் அவசரமாக வயித்துக்க அனுப்பி போட்டுத்தானே வீட்டபோவம்.
இப்ப வாற ரொபிகள்ல ஏதாவது அந்த இனிப்புகளின்ட ருசிக்கு இருக்குதோ சொல்லுங்கோ..

இப்படி நினைத்து நினைத்து எழுதப்போனால் நிறைய விசியங்கள் வரும் கண்டியளோ, எழுதேக்கயே எனக்கும் பழைய ஏக்கங்கள்தான் மிஞ்சும்பாருங்கோ, போனபருவம் மீண்டும் வராதுதான், அனால் அன்றைய பழைய சுகங்கள் இந்த நாகரீக உலகத்திலை இல்லை கண்டியளோ. இப்ப வெறும் பகட்டும் டாம்பீகமும்தான் இருக்குதுதானே ஒழிய யாராவது மனசார அண்டைக்குப்போல சந்தோசமாக இருக்கிறம் என்று சொல்லமாட்டினம் பாருங்கோ.
இப்படி சின்னசின்ன சிறைய விசியங்களை நாங்கள் துலைத்துப்போட்டம் பாருங்கோ..
இதையெல்லாம் நினைத்து வேணும் எண்டால் பெரிதாக ஒரு பெருமூச்சுவிடலாம்! அவ்வளவுதான்.

4 comments:

தங்க முகுந்தன் said...

நான் கேட்டதுக்காக இப்படி ஒரேயடியாக அசத்துறீங்க!
ம்... கலக்கும் நல்லா!

கொஞ்சம் சொற்பிழை இருக்கடா தம்பி! கவனிக்கலயோ? கோபப்படாமல் திருத்தடாப்பா!

கடைசிப பந்தியில வாற
//இப்படி சின்சின்ன சிறைய விசியங்களை//
என்பதில் சின்னச்சின்ன விசியங்களை எண்டும்
//பெருமூச்வுவிடலாம்// - பெருமூச்சுவிடலாம் எண்டும் வரவேணும்!

தங்க முகுந்தன் said...

பிழை திருத்தப்போய் ஒரு சொல்லை விட்டுவிட்டன்!
நிறைய விசியங்களை!

டிலான் said...

நன்றி அண்ணர். நான் தமிங்கிலிஸிலை ரைப் பண்ணுவதால எழுத்துப்பிழைகள் வருகுது. சுட்டிக்காட்டியதுக்கு நன்றி அண்ணர். இனி இவற்றை கவனத்தில எடுத்துக்கொள்ளுறன்.
நன்றி நக்கீரரே...

தங்க முகுந்தன் said...

பாத்தியோ!
இந்தப் பனங்கொட்டைக்காரன்ர புத்திய!
இதுதான் நான் பொதுவா பின்னாட்டம் போடுறதில்லை!
உன்னட்டையும் வாங்கிக் கட்டியாச்சு!
இனி உன்னோட டு!
போடா
நான் உன்னோட கதைக்க மாட்டன்!

ஒரு பாட்டு-
சொன்னாலும் குற்றமடா....!